Total Pageviews

Saturday, July 5, 2014

Swami Vivekananda Quotes in Tamil - 1


என் வீர இளைஞர்களுக்கு,

நியூயார்க்
19.11.1894

என் வீர இளைஞர்களுக்கு, 


அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் - வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் - மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் - மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். 
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! - கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! - இதையே இப்போதும் நான் சொல்கிறேன். 

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை - அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் - ஒரு வார்த்தையில் சொல்வதானால் - மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது - இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி - உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி - முன்னேறிச் செல்லுங்கள்! 

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்! 

ஆசீர்வாதங்கள்.
அன்புள்ள,
விவேகானந்த

பிரபஞ்சம் - சிற்றண்டம்

பிரபஞ்சம் - சிற்றண்டம்

பிரபஞ்சம் - சிற்றண்டம்

மனித மனம் இயல்பாகவே புறத்தில் செல்ல விரும்புகிறது. பொறிகளாகிய பாதைகள் வழியாக உடலுக்கு வெளியே அது தொடர்பு கொள்ள விரும்புவது போலுள்ளது. கண் பார்க்க வேண்டும், காதுகள் கேட்க வேண்டும், மற்ற புலன்கள் புற உலகை உணர வேண்டும். இயல்பாகவே, இயற்கையின் அழகும் நுட்பமும்தான் முதலில் மனிதனின் கருத்தைக் கவர்கின்றன. மனித மனத்தில் புற உலகத்தைப் பற்றிய கேள்விகளே முதலில் எழுந்தன. வானம், நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமி, நதிகள், மலைகள், கடல் இவற்றின் மர்மத்திற்கெல்லாம் மனிதன் தீர்வு காண விரும்பினான். இருட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த மனித மனம் முதலில் புற உலகத்தையே அறிய விரும்பியது என்பதற்கான ஆதாரங்களை உலகின் எல்லா பழைய மதங்களிலும் நாம் காணலாம். நதிதெய்வம், வானதெய்வம், மேகதெய்வம், மழைதெய்வம் என்று எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு தெய்வத்தையும் கற்பனை செய்துகொண்டான். இன்று நாம் இயற்கையின் சக்திகள் என்று சொல்பவை எல்லாவற்றையுமே பழங்கால மனிதன், தெய்வங்களாகவும் தேவர்களாகவும் உருவகப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஆராய்ச்சியின் ஆழம் அதிகமாக ஆக, இந்தப் புற வெளிப்பாடுகள் மனித மனத்திற்குத் திருப்தி அளிக்கவில்லை, கடைசியில், மனிதன் அகமுகமாகத் திரும்பினான். அவனது ஆன்மா பற்றியே கேள்விகள் கேட்கப்படலாயின. பேரண்டத்திலிருந்து ஆராய்ச்சி சிற்றண்டத்தை நோக்கித் திரும்பியது. புற உலகத்திலிருந்து ஆராய்ச்சி அக உலகத்தை நோக்கித் திரும்பியது. புற இயற்கையை ஆராய்வதிலிருந்து அக இயற்கையை ஆராய்வதில் அவன் இறங்கினான். இத்தகைய ஆராய்ச்சியின் பயனாக நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தான். இயற்கையைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றான். வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்தான்.

இன்றைய சொற்பொழிவு இந்த அக மனிதனைப் பற்றியதுதான். அக மனிதனைப் பற்றிய இந்தப் பிரச்சினைபோல், மனிதனுக்கு இவ்வளவு நெருக்கமானதும் விருப்பமானதுமான பிரச்சினை வேறில்லை. எத்தனையோ நாடுகளில், எத்தனையோ கோடி தடவை இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. ரிஷிகள், அரசர்கள், பணக்காரர்கள், ஏழைகள், புண்ணியவான்கள், பாவிகள் என்று ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அவ்வப்போது இந்தக் கேள்வியைக் கேட்டு வந்திருக்கிறார்கள்: நிலையற்ற இந்த மனித வாழ்க்கையில் நிலையான ஏதாவது உண்டா? இந்த உடல் அழிந்த பின்னும் அழியாமல் இருப்பது எதுவுமே இல்லையா? இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலான பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்லையா? உடலை எரித்துச் சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப்படாத ஏதோ ஒன்று இல்லையா? அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது? எங்கே போகிறது? அது எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விகள் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டன. இந்தப் படைப்பு இருக்கும்வரையில் இந்தக் கேள்விகளும் இருக்கத்தான் செய்யும்.

இவற்றிற்கெல்லாம் பதில் கிடைக்காமலும் இல்லை. ஒவ்வொரு முறையும் பதில் கிடைத்தது. காலம் செல்லச்செல்ல, பதில் மேலும்மேலும் உறுதிபெற்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முடிவான பதில் கிடைத்துவிட்டது. அந்தப் பதிலே திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது, விளக்கப்படுகிறது, நமது அறிவிற்குத் தெளிவாகப் புரியும்படி எடுத்துக் கூறப்படுகிறது. நாம் இப்போது செய்ய வேண்டிய காரியமும் அதே பதிலைத் திரும்ப எடுத்துச் சொல்வதுதான். இந்த மிகப் பெரிய பிரச்சினைக்குப் புதிய தீர்வு காண்பதாக நாம் பாசாங்கு செய்வதில்லை. பழைய உண்மையைப் புதிய மொழியில் எடுத்துச் சொல்கிறோம். பழங்காலத்தினரின் சிந்தனையைத் தற்காலத்தினரின் மொழியில் சொல்கிறோம். தத்துவ ஞானிகளின் மொழியை மக்களின் மொழியில் சொல்கிறோம். தேவதைகளின் மொழியை மனிதனின் மொழியில் சொல்கிறோம். கடவுளின் மொழியைப் பாமர மக்களின் மொழியில் சொல்கிறோம். அப்போதுதான் மனிதனால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இந்தக் கருத்துக்கள் எந்தத் தெய்வீக சக்தியிலிருந்து தோன்றினவோ அது எப்போதும் மனிதனில் இருக்கிறது. ஆகவே அவனால் இந்தக் கருத்துக்களை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.

நான் உங்களைப் பார்க்கிறேன். பார்வைக்கு என்னென்ன தேவைப்படுகின்றன? முதலில் கண்கள். மற்ற எந்த விதத்திலும் குறையில்லாதிருந்தாலும் கண்கள் இல்லையென்றால், என்னால் உங்களைப் பார்க்க முடியாது. இரண்டாவது தேவை, உண்மையான பார்வைப் புலன். கண்கள், பார்க்கும் உறுப்புகள் அல்ல. அவை பார்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பொறிகளே. உண்மையான புலன் இந்தப் பொறிகளுக்குப் பின்னால் மூளையிலுள்ள நரம்பு மையமே. அந்தப் புலன் சேதப்படுமானால், மிகவும் தெளிவான கண்களை உடையவனால் கூட எதையும் பார்க்க முடியாது. எனவே இந்த மையம், இந்த உண்மையான பார்வைப்புலன் இருப்பது அவசியம். எல்லா புலன்களின் விஷயமும் இப்படித்தான்.

புறக் காதுகள் ஒலி அலைகளைக் கேள்விப்புலனுக்குத் தெரிவிக்கத்தான் பயன்படுகிறது. இதுவும் போதாது. நீங்கள் நூல்நிலையத்தில், ஒரு புத்தகத்தைப் படிப்பதில் உங்களை மறந்து ஈடுபட்டிருக்கிறீர்கள். அப்போது மணி அடிக்கிறது. அது உங்கள் காதில் விழுவதில்லை. சத்தம் எழுகிறது; அது காற்றில் பயணம் செய்து, காதுகளின்மூலம், கேள்விப்புலனையும் அடைகிறது. ஆனாலும் அதை நீங்கள் கேட்கவில்லை. எதில் குறைபாடு? மனம் அதில் ஈடுபடவில்லை. ஆகவே மூன்றாவதாக, மனத்தின் ஈடுபாடு அவசியம்.

முதலில் புறக் கருவிகள் அதாவது பொறிகள்; பின்னர் பொறிகள் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கின்ற மையமாகிய புலன்; கடைசியாக, புலன்களோடு இணைந்த மனம் இவைமூன்றும் தேவை. மனம் புலனோடு இணைந்திருக்காதபோது, பொறிகளும் புலன்களும் உணர்ச்சிகளை ஏற்கலாம். ஆனாலும் நாம் அதை உணர மாட்டோம். மனமும் தாங்கிச் செல்லும் சாதனம் மட்டுமே, உணர்ச்சியை அது தாங்கிச் சென்று புத்தியின் முன்வைக்க வேண்டும். புத்திதான், தன் முன் வைக்கப்பட்டது என்ன என்பதைத் தீர்மானம் செய்கிறது. இதுகூடப் போதாது. புத்தி எல்லாவற்றையும் தாங்கிச் சென்று, உடலுக்குள், அதிபதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஆன்மாவாகிய அரசனின் முன் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது என்ற கட்டளைகள் அவரிடமிருந்தே பிறக்கின்றன. அந்தக் கட்டளை புத்தி, மனம், புலன்கள் என்று அதே வழியாகப் பொறியை அடைகிறது. அதன்பிறகுதான் செயல் முழுமையாகிறது.

பொறிகள் மனிதனின் புறவுடலில், தூல உடலில் இருக்கின்றன. மனமும் புத்தியும் அப்படியல்ல. அவை இந்துத் தத்துவத்தில் சூட்சும உடல் என்றும் கிறிஸ்தவ மதத் தத்துவத்தில் ஆன்ம உடல் என்றும் அழைக்கப்படுகின்ற உடலில் இருக்கின்றன. இந்தச் சூட்சும உடல், தூல உடலைவிட மிகவும் நுட்பமானது. ஆனால் இது ஆன்மாவல்ல. ஆன்மா, இவை எல்லாவற்றையும் கடந்தது. தூல உடல் சில வருடங்களில் அழிந்துவிடுகிறது. ஒரு சிறு காரணம்கூட அதை அழித்துவிடலாம். சூட்சும உடல் அவ்வளவு சுலபமாக அழியாது. ஆனாலும் சில வேளைகளில் அது சக்தியை இழக்கிறது. மற்ற வேளைகளில் வலிமையாக இருக்கிறது. வயதானவனின் மனம் பலவீனமடைகிறது; உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது மனமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது; பல்வேறு மருந்துகளும் போதைப் பொருட்களும் மனத்தைப் பாதிக்கின்றன; வெளியில் இருக்கும் எல்லாமே அதைப் பாதிக்கின்றன; மனமும் வெளியுலகை எதர்கொள்கிறது-இவையெல்லாம் நமக்குத் தெரியும்.

உடலுக்கு இருப்பது போலவே மனத்திற்கும் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு. ஆகவே மனம் ஆன்மா வல்ல. ஏனெனில் ஆன்மாவுக்கு அழிவோ வீழ்ச்சியோ கிடையாது. அது எப்படி நமக்குத் தெரியும்? இந்த மனத்திற்கும் பின்னால் ஏதோ இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்? சுய ஒளி படைத்த ஞானமும் அறிவின் அடிப்படையும், மந்தமான உணர்வற்றதான ஜடப்பொருளில் இருக்க முடியாது என்பதால்தான். அறிவே உருவான ஜடப்பொருள் என்ற ஒன்று இதுவரை இருந்ததில்லை. எந்த ஜடப்பொருளும் சுயமாக ஒளிர முடியாது. ஜடப்பொருளையெல்லாம் ஒளிரச் செய்வது அறிவுதான். இந்தப் பெரிய கூடம் இங்கே இருப்பதற்கு அறிவுதான் காரணம். ஏதோ அறிவுப் பொருள் இதைக் கட்டியிருக்காவிட்டால் இது இங்கே இருக்க முடியாது. உடலும் சுய ஒளி பெற்றதல்ல. அப்படி இருந்தால் இறந்துபோன உடலிலும் சுய ஒளி இருக்க வேண்டும். மனத்திற்கும் சூட்சும உடலிற்கும் கூடச் சுய ஒளி இல்லை. அவை அறிவின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. சொந்த ஒளி உடைய எதுவும் அழிய முடியாது. வேறு ஒன்றின் ஒளியைப் பெற்றுப் பிரகாசிக்கும் எதன் ஒளியும் நிலையானதல்ல. ஆனால் ஒளியாகவே இருப்பது என்றும் நிலையானது. அதனை வளரவும் தேயவும் செய்ய எதனால் முடியும்? நிலவு வளரவும் தேயவும் செய்கிறது ஏனெனில் அது சூரியனிடமிருந்து பெற்ற ஒளியினால் பிரகாசிக்கிறது. ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டால் அது சிவந்து ஜொலிக்கிறது. அந்த ஒளி சுய ஒளி இல்லை என்பதால் விரைவில் மறைந்துவிடும். ஆகவே வேறொன்றிலிருந்து பெற்றுப் பிரகாசிக்கும் ஒளிக்கு அழிவு உண்டு. சுய ஒளிக்கு அழிவில்லை.

எனவே உடலுக்கு, இந்தப் புறக்கூட்டிற்கு சுய ஒளி இல்லை என்பதையும், அதனால் அது தன்னையே அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நாம் உணர்கிறோம். மனத்தின் விஷயமும் இதுதான். ஏன்? ஏனெனில் மனம் வளரவும் தேயவும் செய்கிறது; சிலவேளைகளில் உற்சாகமாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் இருக்கிறது. எது வேண்டுமானாலும் மனத்தைப் பாதிக்க முடியும். ஆகவே மனத்திற்மூலம் வீசும் ஒளி அதன் சொந்த ஒளியல்ல. அப்படியானால் அந்த ஒளி யாருடையது? அது ஒளியுருவமான ஒன்றிலிருந்துதான் வர வேண்டும். அந்தப் பொருள், தேய்வோ அழிவோ இல்லாததாக, பிரகாசத்தில் கூடுதலோ குறைவோ இல்லாததாக, சொந்த ஒளி உள்ளதாக, ஒளியே உருவானதாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மாவிற்கு அறிவு இருக்கிறது என்று சொல்வது சரியல்ல; ஆன்மாவே அறிவு வடிவம். ஆன்மாவிற்கு இருப்பு உண்டு என்று சொல்ல முடியாது; ஆன்மாதான் இருப்பு. ஆன்மா ஆனந்தம் அடைகிறது என்று சொல்ல முடியாது; ஆன்மாதான் ஆனந்தம். ஆனந்தம் அடைவது எதுவுமே, அந்த ஆனந்தத்தை வேறு எங்கிருந்தோதான் பெற்றிருக்க வேண்டும். அறிவை உடைய எதுவும் அதை வேறு எங்கிருந்தோதான் பெற்றிருக்க வேண்டும். மற்றவற்றைச் சார்ந்திருக்கும் எதற்குமே சுய இருப்பு இல்லை. எங்கே குணங்கள் இருக்கின்றனவோ, அவை உண்மைப் பொருளின்மீது பிரதிபலிக்கப்பட்டவை. ஆன்மாவின் சாரமே அவை. அறிவு, இருப்பு, ஆனந்தம் என்பவற்றை ஆன்மா குணங்களாகப் பெற்றிருக்கவில்லை.

இது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஏன் நாம் முடிவு செய்ய வேண்டும்? அறிவு, இருப்பு, ஆனந்தம் எல்லாம் ஆன்மாவின் சாரம். இவற்றை அது வேறு எங்கிருந்தும் பெறவில்லை என்பதை நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? உடலின் ஒளி, மனத்திலிருந்து பெறப்பட்டது போல், ஆன்மாவின் ஒளி, ஆன்மாவின் ஆனந்தம், ஆன்மாவின் அறிவு எல்லாம் வேறு எங்கிருந்தோ பெறப்பட்டது என்று ஏன் சொல்லக் கூடாது? இது போன்ற வாதங்களுக்கு முடிவே இல்லை. ஆன்மா தனது குணங்களை வேறோரிடத்திலிருந்து பெறுகிறது என்றால், அது எங்கிருந்து இவற்றைப் பெறுகிறது என்று இப்படியே முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கும். கடைசியில், சுய ஒளி உள்ள ஒரு பொருளில் போய்தான் இந்த வாதம் முடிந்தாக வேண்டும். எனவே தர்க்கரீதியாக விஷயத்தை முடிப்பதற்கு, சுய ஒளி உள்ள பொருள் இருக்கிறது என்ற நிலை வந்தவுடன் வாதத்தை நிறுத்திக்கொள்வதுதான் ஒரே வழி.

ஆகவே மனிதன் என்பவன், முதலில் வெளிப்போர்வையாகிய தூல உடல்; இரண்டாவது மனம், புத்தி, நான்-உணர்வு இவற்றைக் கொண்ட சூட்சும உடல் இவற்றால் ஆக்கப்பட்டவன் என்பதைக் காண்கிறோம். இவற்றிற்குப் பின்னால்தான் மனிதனின் உண்மையான ஆன்மா இருக்கிறது. தூல உடலின் குணங்களும் சக்திகளும் மனத்திலிருந்து பெறப்பட்டவை. மனம், அதாவது சூட்சும உடல் சக்திகளையும் ஒளியையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மாவிடமிருந்து பெறுகிறது.

இந்த ஆன்மாவின் இயல்பைப் பற்றிய பல கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆன்மா சுய ஒளி பெற்றது; அறிவு, இருப்பு, ஆனந்தம் இவற்றைச் சாரமாகக் கொண்டது; அதாவது சச்சிதானந்த இயல்புடையது என்ற வாதத்திலிருந்து ஆன்மாவின் இருப்பு நிரூபிக்கப்பட்டால், ஆன்மா படைக்கப்பட்டதாக இருக்க முடியாது என்பது உறுதியாகிறது. சொந்த ஒளி உள்ள, பிற எதையும் சாராத எந்தப் பொருளும், வேறு எதிலிருந்தும் தோன்றியதாக இருக்க முடியாது. அது எப்போதும் இருந்தது. அது இல்லாத காலமே இல்லை. ஆன்மா இல்லையென்றால் காலம் எப்படி இருக்க முடியும்? காலம் ஆன்மாவில்தான் இருக்கிறது. ஆன்மா தனது சக்திகளை மனத்தின்மீது பிரதிபலிக்கச் செய்து, மனம் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் காலம் பிறக்கிறது. ஆன்மா இல்லையென்றால் நிச்சயமாக எண்ணம் எதுவும் இல்லை. எண்ணம் இல்லாமல் காலம் இல்லை. காலமே ஆன்மாவில் அடங்கியதாக இருக்கும்போது ஆன்மா காலத்தில் இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? ஆன்மா, பிறப்பு இறப்பற்றது. ஆனால் அது இந்தப் பல்வேறு நிலைகளின் வழியாகவும் செல்கிறது; தாழ்ந்த நிலையிலிருந்து சிறிதுசிறிதாகத் தன்னை வெளிப்படுத்தியவாறு உயர்ந்த நிலைக்குச் செல்கிறது; மனத்தின்மூலமாக உடலை இயக்கி, தன் மகிமையை வெளிப்படுத்துகிறது; உடலின் மூலமாக வெளி உலகத்தைப் புரிந்து கொள்கிறது; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்துகிறது; அந்த உடல் நலிந்து போகும்போது வேறோர் உடலை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது. பொதுவாக மறுபிறப்பு என்று சொல்லப்படுவதைப் பற்றியது அது. இந்தக் கருத்து, சிலவேளைகளில் மக்களை வெகுவாகப் பயமுறுத்துகிறது. இதைப் பற்றிய மூடநம்பிக்கைகளோ மிகவும் அதிகமாக இருக்கிறது. சிந்தனையாளர்கள்கூடத் தாங்கள் சூன்யத்திலிருந்து தோன்றியதாகவும், அதேவேளையில் இனிமேல் எப்போதும் நிலையாக இருப்போம் என்றும் தர்க்கம் செய்து நிரூபிக்க முயல்கிறார்கள். சூன்யத்திலிருந்து தோன்றியவர்கள் சூன்யத்திற்குத்தான் திரும்பிப்போக வேண்டும். நீங்களும் சரி, நானும்சரி, ஒருவருமே சூன்யத்திலிருந்து தோன்றவில்லை. சூன்யத்திற்குத் திரும்பிப் போகப் போவதும் இல்லை. நாம் எப்போதுமே இருக்கிறோம்; இருப்போம். பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் நம்மை அழித்து, சூன்யத்திற்கு அனுப்ப முடியாது. இந்த மறுபிறப்புக் கொள்கையைப் பார்த்து, நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்ல, மனிதகுலத்தின் நீதிநெறியும் நல்லொழுக்கமும் நிலைப்பதற்கு இந்தக் கொள்கை மிகவும் அவசியம். சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் வர முடிந்த தர்க்கரீதியான முடிவு இது மட்டுமே.

இனிமேல் என்றென்றைக்கும் நாம் இருக்கப் போவது உண்மையானால், இதற்கு முன்னாலும் எப்போதும் நாம் இருந்திருக்க வேண்டும். வேறுவிதமாக இருக்க முடியாது. இந்தக் கொள்கையை எதிர்த்து எழும் சில ஆட்சேபங்களுக்கு நான் பதில் சொல்ல முயல்கிறேன். நம்மில் பலருக்கு இந்தக் கேள்விகளே முட்டாள்தனமாக இருக்கும். இருந்தாலும் அவற்றிற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால், சிலவேளைகளில், ஆழ்ந்த சிந்தனையாளர்களுக்கூட முட்டாள்தனமான கருத்துக்கள் எழுவதுண்டு. எவ்வளவு முட்டாள்தனமான, தவறான கருத்துக்களையும் ஆதரிக்கத் தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று யாரோ நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை என்பதே முதல் ஆட்சேபம். இந்த வாழ்க்கையிலேயே பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள் நினைவில் இருக்கின்றனவா? குழந்தைகளாக இருந்தபோது என்ன செய்தோம் என்பது நம்மில் எத்தனைபேருக்கு நினைவிருக்கிறது? நம்மில் யாருக்குமே நமது குழந்தைப் பருவம் நினைவில் இல்லை. நம்முடைய இருப்புக்கு நினைவே ஆதாரம் என்றால் இந்த வாதத்தின்படி நமக்குக் குழந்தைப் பருவமே இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் குழந்தைப் பருவம்தான் நம் நினைவில் இல்லையே! நம் இருப்புக்கு நம் நினைவே ஆதாரம் என்று சொல்வது கலப்படமற்ற முட்டாள்தனம். இறந்தகாலத்தை நாம் ஏன்தான் நினைக்க வேண்டும்? அந்தப் பழைய மூளை சிதறுண்டு போய்விட்டது. இப்போது நமக்கு இருப்பது புதிய மூளை. நமது கடந்தகால சம்ஸ்காரங்களின் மொத்தமே இந்தப் பிறவியில் புது மூளையாக உருவெடுத்திருக்கிறது. நமது மனம், இந்தப் புதிய மூளையுடன் தான் புதிய உடலை எடுத்திருக்கிறது.

என்னுடைய எல்லையற்ற முற்பிறவிகளின் பலனே இப்போது இங்கே நின்று கொண்டிருக்கும் நான். என் முற்பிறவிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உண்மையை நேருக்குநேர் கண்ட ஒரு பழங்கால ரிஷியோ, முனிவரோ ஏதாவது சொன்னால், உடனே தற்கால மக்கள், ஓ, அவர் ஒரு முட்டாள்! என்று கூறிவிடுவார்கள். பெயரை மட்டும் மாற்றுங்கள், ஹக்ஸ்லி சொன்னார், டிண்டால் சொன்னார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்; அது வேத வாக்கு. பழைய மூடநம்பிக்கைகளுக்குப் பதிலாகப் புதிய மூட நம்பிக்கைகள்; பழங்கால மத ஆச்சாரியர்களுக்குப் பதிலாக புதிய விஞ்ஞான ஆச்சாரியர்கள், அவ்வளவுதான். ஆகவே முற்பிறவி நினைவைப் பற்றிய ஆட்சேபம் பயனற்றது என்பது தெரிகிறது. மறுபிறவிக் கொள்கையை எதிர்த்து எழும் முக்கியமான ஆட்சேபம் இது ஒன்றுதான்.

முற்பிறவி நினைவுகள் இருக்க வேண்டும் என்பது மறுபிறவிக் கொள்கைக்கு அவசியமில்லை என்று கண்டோம். ஆனாலும் இந்த முற்பிறவி நினைவுகள் சிலவேளைகளில் வருகின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எந்தப் பிறவியில் நாம் முக்தர்களாக ஆகிறோமோ, அந்தப் பிறவியில், நம்முடைய எல்லா முற்பிறவி நினைவுகளும் நம் ஒவ்வொருவருக்கும் வரும். அப்போதுதான் இந்த உலகமே ஒரு கனவு என்பதை நாம் உணர்வோம். அப்போதுதான் உலகமே ஒரு நாடகமேடை, நாமெல்லாம் அதில் நடிக்கும் நடிகர்கள் என்பதை நம் அந்தராத்மாவில் உணர்வோம். அப்போதுதான் பற்றின்மை என்ற கருத்து நம்மிடம் இடிபோல் உறுதியாக நிலைபெறும். அப்போது தான் வாழ்க்கையின் இன்பங்களுக்கான தாகம், உலகின் மீதும் வாழ்வின்மீதும் நமக்குள்ள மோகம் எல்லாம் என்றென்றைக்குமாக மறையும். இவற்றையெல்லாம் எத்தனைமுறை அனுபவித்திருக்கிறோம், எத்தனைகோடி தந்தையர், அன்னையர், மகன்கள், மகள்கள், கணவர்கள், மனைவிகள், உற்றார், உறவினர், பணம், பலம் எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதுதான் வெட்டவெளிச்சமாகத் தெரியும். அவையெல்லாம் வந்துவந்து போய்க் கொண்டிருந்தன. எவ்வளவு தடவை நாம் வாழ்க்கை அலையின் உச்சியில் இருந்திருக்கிறோம்! எத்தனை தடவை நம்பிக்கையை இழந்து வாழ்க்கையின் முடிவுக்கே சென்றதுபோல் தவித்திருக்கிறோம். இதெல்லாம் நினைவு வரும்போதுதான் உலகம் நம்மை வெறுப்போடு பார்த்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நாம் புன்னகை செய்வோம். அப்போதுதான் தைரியமாக எழுந்து நின்று, மரணமே, உன்னைப்பற்றிக்கூட எனக்குக் கவலை கிடையாது, உன்னால் என்னைப் பயமுறுத்த முடியாது என்று கூறுவோம். இந்த நிலை எல்லோருக்கும் வரும்.

மறுபிறவிக் கொள்கையை அறிவுபூர்வமாக நிரூபிக்க முடியுமா? இதுவரை நாம் எதிர்மறையாக வாதம் செய்து வந்தோம். இந்தக் கொள்கையின் எதிர்வாதங்கள் பயனற்றவை என்று நிரூபித்துவிட்டோம். ஆனால் நேர்முகமான நிரூபணம் உண்டா? உண்டு. மிகவும் உறுதியான வாதங்கள் உண்டு. அறிவை வளர்த்துக் கொள்வதில், மனிதர்களுக்கிடையில் உள்ள வேறுபாட்டை இந்த மறுபிறவிக் கொள்கை மட்டுமே விளக்க முடியும். முதலில் நாம் அறிவைப் பெறும் வழிபற்றிப் பார்ப்போம். நான் தெருவில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நாயைப் பார்க்கிறேன், அது நாய் என்பது எனக்கு எப்படித் தெரியும்? நான் என் மனத்தில் அதைத் தேடுகிறேன். எனது கடந்தகால அனுபவங்களெல்லாம், தனித்தனி அறைகளில் வரிசைப்படுத்தப்பட்டது போல், மனத்தில் ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்போது, உடனே அதை என் மனத்திலுள்ள பழைய அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதே மாதிரி அனுபவம் ஏற்கனவே என் மனத்தில் இருந்தால், உடனே இரண்டையும் பொருத்திப் பார்த்துத் திருப்தியான முடிவுக்கு வருகிறேன். ஏற்கனவே உள்ள அனுபவங்களோடு புதிய அனுபவம் பொருந்துவதால், நான் பார்ப்பது நாய் என்பதை அறிகிறேன். புதிய அனுபவம் ஏற்கனவே உள்ள பழைய அனுபவம் எதனோடும் பொருந்தாவிட்டால், எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. பழைய, புதிய அனுபவங்கள் பொருந்தாததால் ஏற்படும் அதிருப்தி நிலையை அறியாமை என்கிறோம். இரண்டு அனுபவங்களும் பொருந்தும்போது ஏற்படும் திருப்தி நிலையை அறிவு என்கிறோம்.

ஓர் ஆப்பிள் கீழே விழுந்தபோது, மனிதன் திருப்தி அடையவில்லை. பிறகு, எல்லா பழங்களும் கீழே விழுகின்றன என்று படிப்படியாகக் கண்டறிந்து, அவ்வாறு செய்யும் சக்தியை புவியீர்ப்புச் சக்தி என்று அழைத்தான். ஆகவே பழைய அனுபவங்கள் இல்லாமல் புதிய அனுபவம் எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்ப்பதற்கு பழைய அனுபவங்கள் எதுவும் இல்லை. சில ஐரோப்பியத் தத்துவ மேதைகள் கூறுவதுபோல், ஒரு குழந்தை பழைய அனுபவம் எதுவுமே இல்லாமல் உலகில் பிறக்குமானால், அந்தக் குழந்தைக்கு அறிவு வளர்ச்சியே இருக்காது. ஏனென்றால் புதிய அனுபவம் எதையும் பொருத்திப் பார்ப்பதற்கு அதனிடம் பழைய அனுபவம் எதுவும் இல்லையே! அறிவு வளர்ச்சிக்கான ஆற்றல் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதைக் காண்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஏற்கனவே பெற்றுள்ள அனுபவ அறிவுடன்தான் பிறக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.

அறிவை, அனுபவம் மூலமாக மட்டுமே பெற முடியும். வேறு வழியே இல்லை. இந்தப் பிறவியில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்காவிட்டால், வேறு பிறவியில் பெற்றிருக்க வேண்டும். எங்கும் மரண பயம் காணப்படுகிறதே, அது எப்படி? முட்டையிலிருந்து கணநேரத்திற்கு முன்னர்தான் வெளிவந்த கோழிக்குஞ்சு, பருந்தைக் கண்டவுடன் பயந்து நடுங்கித் தாயிடம் ஓடுகிறது. இதற்குப் பழைய விளக்கம் ஒன்று இருக்கிறது. (விளக்கம் என்ற உயர்ந்த சொல்லை இதற்கு நான் பயன்படுத்துவதே தவறு). அதை இயல்புணர்ச்சி என்கிறார்கள். முட்டையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த கோழிக்குஞ்சுக்கு மரணபயம் ஏற்படச் செய்தது எது? கோழியால் அடைக்காக்கப்பட்டு, பொரித்து, அப்போதுதான் வெளிவந்த வாத்துக்குஞ்சு தண்ணீரைக் கண்டவுடன், அதில் குதித்து, நீந்தத் தொடங்குகிறதே, அது எப்படி? அது இதற்குமுன் நீந்தியதில்லை, வேறு ஏதாவது நீந்துவதையும் பார்த்ததில்லை. மனிதர்கள் அதை இயல்புணர்ச்சி என்கிறார்கள் . இது பெரிய வார்த்தைதான். ஆனால் இந்த வார்த்தை புதிதாக எதையும் நமக்கு விளக்கவில்லை.

இந்த இயல்புணர்ச்சி என்பதை நாம் சிறிது ஆராய்வோம். ஒரு சிறுமி பியானோ வாசிக்க ஆரம்பிக்கிறாள். முதலில் சிலகாலம் அவள் மிகவும் கவனமாக ஒவ்வொரு கட்டையிலும் கைவைத்துப் பழக வேண்டும். வருடக்கணக்காக வாசித்துப் பழகிய பிறகோ பியானோ வாசிப்பது ஏறக்குறைய அனிச்சைச் செயலாகி விடுகிறது; இயல்பாக வந்து விடுகிறது. முதலில் உணர்வுபூர்வமாகச் செய்ததை, பின்னர் எந்திரகதியில் செய்ய முடிகிறது. நிரூபணம் இன்னும் முழுமையாகவில்லை. ஒருபாதிக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதாவது, அனிச்சையான இயல்புணர்ச்சிச் செயல்கள் எல்லாவற்றைமே மனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதே அது. உடம்பிலுள்ள ஒவ்வொரு தசையையும் சித்தத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயம்தான். நாம் இயல்புணர்ச்சி என்று சொல்வது, மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்களின் வீழ்ச்சியே என்பதை நாம் இரண்டு விதமாக நிரூபித்து விட்டோம். இதே கருத்தைப் படைப்பு முழுவதற்கும் பொருத்திப் பார்க்கும்போது, இயற்கை எங்கும் ஒரே சீராக இருக்குமானால், மனிதனிடமும் வேறு மிருகங்களிடமும் காணப்படும் இயல்புணர்ச்சி என்பது சுயேச்சையின் வீழ்ச்சியே என்பது தெளிவாகிறது.

ஒவ்வோர் ஒடுக்கத்திற்கும் முன்பு ஒரு விரிவு இருக்க வேண்டும், ஒவ்வொரு விரிவுக்கும் முன்பு ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்ற விதியை, பேரண்டம் என்ற தலைப்பின் கீழ் நாம் பார்த்தோம். அந்த விதியை இங்கே பொருத்திப் பார்த்தால், பகுத்தறிவின் ஒடுக்கமே இயல்புணர்ச்சி என்பதைக் காண்கிறோம். எனவே மனிதர்களிலோ மிருகங்களிலோ நாம் காணும் இயல்புணர்ச்சி என்பது மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்களின் வீழ்ச்சியும் ஒடுக்கமுமே என்பது தெளிவு. இனி, அனுபவம் இல்லாமல் மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்கள் இல்லை. அறிவுக்கு அனுபவமே காரணம். பிறக்கும்போதே எல்லா உயிர்களுக்கும் அந்த அறிவு இருக்கிறது. மரணபயம், வாத்துக் குஞ்சுக்குப் பிறந்தவுடனேயே நீந்தத் தெரிவது, மனிதர்களின் அனிச்சைச் செயல்கள் போன்ற எல்லா இயல்புணர்ச்சிகளும் முன் அனுபவத்தின் விளைவுகளே.

இதுவரை நாம் தெளிவாக ஆராய்ந்து வருகிறோம்; இதுவரை தற்கால விஞ்ஞானமும் நமக்கு ஒத்துப்போகிறது. ஆனால் இங்கே இன்னொரு பிரச்சினை எழுகிறது. தற்கால விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின்மூலம் புராதன ரிஷிகளின் கருத்துக்களுக்கே திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வந்ததுவரை இரண்டு கருத்துக்களும் முற்றிலுமாக ஒத்துப்போகின்றன. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மிருகமும் முன் அனுபவத்துடனேயே பிறப்பதையும், மனத்தின் எல்லா இயக்கங்களுக்கும் முன் அனுபவமே காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அனுபவம் ஆன்மாவிற்குச் சொந்தம் என்று சொல்வதில் என்ன பயன்? அது உடலுக்கு, உடலுக்கு மட்டுமே சொந்தம் என்று ஏன் சொல்லக்கூடாது? அது ஏன் பரம்பரைக் குணமாக இருக்கக்கூடாது? என்று அவர்கள் கேட்கிறார்கள். கடைசிக் கேள்வி இதுதான்! நாம் பிறக்கும்போது நம்முடன் பிறக்கும் அனுபவங்கள், நம் முன்னோர்களுடைய அனுபவங்களின் மொத்தப் பலனே என்று ஏன் சொல்லக் கூடாது? முதல் உயிரணுவிலிருந்து முழுமையடைந்த மனிதன் வரை பெற்ற அனுபவங்களின் மொத்தத் தொகுதி நம்முள் இருக்கிறது. அது பரம்பரையாக ஒவ்வோர் உடல்வழியாகவும் தொடர்ச்சியாக வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்?

கேள்வி நன்றாகத்தான் இருக்கிறது. பரம்பரை குணக்கருத்தை நாம் ஓரளவு ஒப்புக்கொள்ளவே செய்கிறோம். ஆனால் எதுவரை ஒப்புக்கொள்கிறோம்? மூலப்பொருள் அதாவது உடல் என்பது பரம்பரைகுணத்திற்கு உட்பட்டது என்பதுவரைதான். உடல்மட்டும்தான் பரம்பரையாக வருகிறது. அதாவது நம்முடைய முன்வினைப் பயனால், குறித்த ஓர் உடலில் நாம் பிறக்கிறோம். நம்முடைய ஆன்மாவைத் தங்கள் குழந்தையாகப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெற்றோர்கள் அந்த உடலுக்கான உருவத்தை மட்டுமே கொடுக்கிறார்கள்.

மன அனுபவம் ஜடப்பொருளில் பதிந்திருக்க முடியும், ஒடுங்கியிருக்க முடியும் என்று, நிரூபணமற்ற வினோதமான ஒரு கருத்தைப் பரம்பரைகுணக் கொள்கை நம் முன் வைக்கிறது. நான் உங்களைப் பார்க்கும்போது, என் மனமாகிய ஏரியில் ஓர் அலை எழுகிறது. பின்னர் அது அடங்கிவிடுகிறது; ஆனால் நுட்பமான உருவத்துடன் சமஸ்காரமாக என் மனத்தில் பதிகிறது. உடலாகிய பொருளில் ஒரு பவுதீகப் பதிவு இருக்க முடியும், அதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அழியும் இயல்புடைய உடலில் மனப்பதிவு இருக்க முடியும் என்று எப்படி ஊகிக்க முடியும்? மனப்பதிவை எது எடுத்துச் செல்கிறது? சரி, மனப்பதிவு ஒவ்வொன்றும் உடலில் பதிந்திருக்க முடியும் என்றே வைத்துக் கொள்வோம். முதல் மனிதனிலிருந்து என் தந்தைவரை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட ஒவ்வொரு பதிவும் என் தந்தையின் உடலில் இருந்ததாகவும் வைத்துக் கொள்வோம். அது என் தந்தையிடமிருந்து எனக்கு எப்படி வந்தது? உயிரணுவின் மூலமாகவா? அது எப்படி இருக்க முடியும்? ஏனென்றால் தந்தையின் உடல் அப்படியே குழந்தைக்கு வருவதில்லை. ஒரே தாய்தந்தையருக்குப் பல குழந்தைகள் இருக்கலாம். அப்படியானால் பரம்பரைகுணக் கொள்கையின்படி பதிவும் பதிக்கப்பட்ட பொருளும் ஒன்று என்றால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தங்கள் பதிவில் ஒரு பகுதியைப் பெற்றோர்கள் இழக்க வேண்டும். அல்லது, பெற்றோர்கள் தங்கள் பதிவுகள் முழுவதையும் முதல் குழந்தைக்குக் கொடுத்துவிட்டால் முதல் குழந்தை பிறந்தபிறகு பெற்றோர்களின் மனம் சூன்யப் பிரதேசமாகத் தான் இருக்க வேண்டும்.

சரி. இதுவரை கடந்து சென்ற எல்லா காலங்களின் பதிவுகளும் உயிரணுவில் இருந்தால், அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? அது சாத்தியமில்லாத ஒன்று. அந்த உயிரணுவில், எங்கே, எப்படி அந்தப் பதிவுகள் இருக்கின்றன என்பதை உடலியல் வல்லுனர்கள் நிரூபிக்கும் வரையிலும், உடலிலுள்ள உயிரணுவில் மனப்பதிவு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதன் பொருள் என்ன என்பதை அவர்கள் விளக்கும்வரையிலும், அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆகவே அனுபவப் பதிவு மனத்தில் இருக்கிறது, மனமே மறுபடியும் மறுபடியும் பிறக்கிறது, தனக்கு மிகவும் பொருத்தமான உடலை அது பயன்படுத்துகிறது. அத்தகைய ஓர் உடல் கிடைக்கும்வரை அது காத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இதை நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆன்மாவிற்குப் பொருத்தமான உடலைக் கொடுக்கும்வரை, பரம்பரைகுணக் கொள்கை சரியாக இருக்கிறது. ஆனால் மனம் உடலுக்கு உடல் தாவிக்கொண்டே இருக்கிறது; அதன் பயணம் தொடர்கிறது. நான் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் செய்யும் ஒவ்வொரு செயலும் மனத்தில் நுட்பமான உருவங்களாகப் பதிந்திருக்கின்றன. வேளை வாய்க்கும்போது அவை வெளிவந்து புதிய உருவம் தாங்குகின்றன. நான் உங்களைப் பார்க்கும்போது என் மனத்தில் ஓர் அலை எழுகிறது. அது ஆழமாகப் பாய்ந்து சென்று மிகமிக நுட்பமாக மாறுகிறது; ஆனால் அழிவதில்லை. நினைவு வடிவாக மறுபடியும் எழுவதற்கு அது தயாராக இருக்கிறது. இந்தப் பதிவுகளெல்லாம் என் மனத்தில் இருக்கின்றன. நான் இறக்கும்போது இந்தப்பதிவுகளின் ஒட்டுமொத்தப்பலன் என்னில் எஞ்சி நிற்கும். இங்கே ஒரு பந்து இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் கையில் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு இந்தப்பந்தை அடிப்பதாக வைத்துக் கொள்வோம். பந்து இந்த அறைக்குள் அங்குமிங்கும் பறக்கிறது, கதவை அடைந்துவிட்டால் வெளியே பறக்கிறது. அது தன்னுடன் எதை எடுத்துக் கொண்டு போகிறது? அது வாங்கிய அடிகளின் மொத்தப் பலனையே, பந்து எங்கே போக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இதுவே.

உடல் அழியும்போது ஆன்மாவிற்கு வழிகாட்டுவது எது? அது முதலிலிருந்தே செய்த செயல்கள், நினைத்த எண்ணங்கள் ஆகியவற்றின் மொத்தப் பலனே. இந்தப் பலன், மனம் இன்னும் அனுபவம் பெறுவதற்காகப் புதிய உடலை எடுக்கும் அளவுக்கு இருந்தால், அந்த உடலுக்குத் தேவையான மூலப்பொருளைத் தருவதற்குத் தயாராக இருக்கும் பெற்றோர்களை நாடிச் செல்கிறது. இவ்வாறு அது ஓர் உடலை விட்டு மற்றோர் உடலுக்குத் தாவுகிறது. சிலவேளைகளில் ஏதாவது ஒரு சொர்க்கத்திற்குப் போகிறது. திரும்பவும் உலகிற்கு வந்து, மனிதனாகவோ மிருகமாகவோ உருவெடுக்கிறது. இவ்வாறு, முழு அனுபவம் பெறும்வரையிலும் வட்டத்தை நிறைவு செய்யும் வரையிலும் ஆன்மா இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதன் பிறகுதான், அது உண்மை இயல்பை அறிகிறது தான் யார் என்பதை உணர்கிறது. அப்போது அதன் அறியாமை மறைகிறது; அதன் ஆற்றல்கள் வெளிப்படுகின்றன; அது நிறைநிலையை அடைகிறது.

அதன்பிறகு ஆன்மா தூல உடலின்மூலம் இயங்க வேண்டியதில்லை; சூட்சுமமான அல்லது மனம் போன்ற நுட்பமான உடல்கள் மூலமாக இயங்கும் அவசியமும் இல்லை. அது தன் ஒளியிலேயே ஒளிர்கிறது; பரிபூரண சுதந்திரம் பெற்றுவிடுகிறது. இனி அது பிறக்க வேண்டியதில்லை, இறக்கவும் வேண்டியதில்லை. இதைப் பற்றிய விளக்கங்களுக்கு நாம் இப்போது போக வேண்டாம்.

மறுபிறவி பற்றிய மற்றோர் அம்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மனித ஆன்மாவின் சுதந்திர நிலையைப் பற்றிய கொள்கையே அது. சொந்த பலவீனங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மீது சுமத்துவது பொதுவான மனித இயல்பு. மறுபிறவிக் கொள்கை ஒன்றுதான் இந்தத் தவறைச் செய்வதில்லை. நாம் நம்முடைய தவறுகளைப் பார்ப்பதில்லை. கண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியாது, பிறர் ஒவ்வொருடைய கண்களையும் அதனால் பார்க்க முடியும். நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும் வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். அது முடியாவிட்டால் கடவுள்மீது சுமத்துகிறார்கள். அல்லது ஒரு பிசாசைக் கற்பனை செய்து, அதன்மீது சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். விதி எங்கே இருக்கிறது? விதியாக இருப்பது யார்? நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நம்விதிக்கு நாமே காரணம். பழியாகட்டும், புகழாகட்டும், அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல.

காற்று வீசுகிறது; பாய்மரம் விரித்த கப்பல்கள் காற்றின் துணையுடன் முன்னேறுகின்றன. பாயைச் சுருட்டி வைத்திருக்கும் கப்பல்களுக்குக் காற்றின் துணை கிடைப்பதில்லை. அது காற்றின் குற்றமா? கடவுளின் கருணை என்னும் காற்று, இரவுபகலாக இடையீடின்றி வீசிக்கொண்டிருக்கிறது. அந்தக் கருணை அழிவற்றது. நம்மில் சிலர் சந்தோஷமும் சிலர் துன்பமும் அடைவது கடவுளின் குற்றமா? நாமே நம் விதியை உருவாக்குகிறோம். வலியவர், எளியவர் இருவருக்கும் இறைவனின் சூரியன் ஒரே மாதிரிதான் ஒளி வீசுகிறான். புண்ணியவான்களுக்கும் பாவிகளுக்கும் அவரது காற்று ஒரே மாதிரிதான் வீசுகிறது.

கடவுள் எல்லோருக்கும் தலைவர், எல்லோருக்கும் தந்தை. அவர் கருணை வடிவினர். பாரபட்சமற்றவர். எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்கின்ற அவர் நமது வாழ்க்கையின் அற்ப விஷயங்களை நாம் பார்ப்பது போலவா பார்ப்பார்! கடவுளைப்பற்றிய என்ன அற்பத்தனமான கருத்து! நாம் சிறிய நாய்க்குட்டிகளைப்போல் வாழ்வு, சாவு என்ற போராட்டத்தில் இங்கே ஈடுபட்டிருக்கிறோம். கடவுளும் இந்தப் பிரச்சினைக்கு நம்மைப்போல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்று முட்டாள்தனமாக நினைக்கிறோம். நாய்க்குட்டிகளின் விளையாட்டைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.

கடவுளின்மீது பழியைப் போட்டு, தண்டிப்பவராகவோ பரிசளிப்பவராகவோ அவரை உருவகப்படுத்துவதற்கான நமது முயற்சிகளெல்லாம் வெறும் முட்டாள்தனம். கடவுள் யாரையும் தண்டிப்பதும் இல்லை, யாருக்கும் பரிசளிப்பதுமில்லை. எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், உறுதியாக, நிச்சயமாக எல்லோருக்கும் உதவக் காத்திருப்பது கடவுளின் கருணை. அதை எப்படித் துணைகொள்கிறோம், பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. மனிதர்களையோ கடவுளையோ வேறு யாரையுமோ பழி சொல்லாதீர்கள். துன்புற நேருமானால் பழியை நம் மீதே சுமத்திக் கொள்ள வேண்டும். நம்மை உயர்த்திக் கொள்ள முயல வேண்டும்.

பிரச்சினைக்கு இது ஒன்றுதான் தீர்வு. அந்தோ, பிறர்மீது பழி போடுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக அவர்கள் துன்பப்படுபவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தவறுகளின் மூலமாகவே இந்தக் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால் பிறர்மீது பழிபோடுகிறார்கள். இது அவர்களின் நிலைமையை மாற்றுவதில்லை, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை, பிறர்மீது பழிபோட முயல்வது அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஆகவே உங்கள் தவறுகளுக்குப் பிறரைப் பழி சொல்லாதீர்கள். சொந்தக் காலிலேயே நில்லுங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நான் அனுபவிக்கும் இந்தத் துன்பத்திற்கு நானே காரணம். ஆகவே நானேதான் இதற்குப் பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் படைத்ததை நானேஅழிக்க முடியும். மற்றவர்கள் படைத்ததை என்னால் அழிக்க முடியாது. ஆகவே எழுந்திருங்கள், உறுதியுடனும் தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்துகொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும் உதவியும் உங்களுள்ளேயே இருக்கின்றன. உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போனது போகட்டும். எல்லையற்ற எதிர்காலம் உங்கள் முன்னே இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு செயலும் அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீய செயல்களும் தீய எண்ணங்களும் புலிகளைப் போல் நம்மீது பாயத் தயாராக இருக்கின்றன. ஆனால் அதோடுகூடவே நல் எண்ணங்களும் நற்செயல்களும் பல்லாயிரக்கணக்கான தேவ தூதர்களைப் போல் நம்மைக் காப்பாற்ற எப்போதும் தயாராக இருக்கின்றன என்பதையும் நம்புங்கள். உத்வேகத்துடன் செயல்படுங்கள்.

இந்துமதம்: tamil quotes

இந்துமதம்: tamil quotes: tamil quotes

Friday, January 21, 2011

Kanchipuram - Wikipedia, the free encyclopedia

Kanchipuram - Wikipedia, the free encyclopedia

Kanchipuram - Varanasi of South India

Kanchipuram, Kanchi, or Kancheepuram (Tamil: காஞ்சிபுரம்) is a temple city and a municipality in Kanchipuram district in the Indian state of Tamil Nadu. It is a temple town and the headquarters of Kanchipuram district. In ancient times it was called Kachi and Kachiampathi.

Kanchipuram is located on the Palar River, and known for its temples and silk sarees.

There are several big temples(including some of the greatest Vishnu Temples and Shiva Temples of Tamil Nadu) like Varadharaja Perumal Temple for Lord Vishnu and Ekambaranatha Temple which is one of the five forms of abodes of Lord Siva, (it is the earth abode here, other abodes include Chidambaram (Sky), Sri Kalahasti (air), Thiruvanaikaval (water) and Tiruvannamalai (fire)), Kamakshi Amman Temple, Varadharaja Perumal Temple, Kumara Kottam, Kachapeshwarar Temple, Kailasanathar Temple and many more.

Kanchipuram is also called as "City of 1000 Temples". Kanchipuram is also famous for its silk sarees, which are hand woven

Arsha Vidya Satsanga, Houston, TX, USA

Arsha Vidya Satsanga, Houston, TX, USA


Arsha Vidya Satsanga (आर्ष विद्या सत्सङ्ग) is a non-profit organization born out of the inspiration derived from the teachings of His Holiness Swami Dayananda Saraswati of Arsha Vidya Gurukulam.



Mission Statement

The mission of the Arsha Vidya Satsanga is to re-establish the cultural self-identity, and reinstate agency and cognitive independence for Hindus - or people following the Sanatana Dharma / Vedic tradition.

Monday, November 29, 2010

Sampath Kumar writes for Hiduism and Vaishnava Divya Desams

My Friend Sri.Sampathkumar is writing more about Hinduism, Vaishnavism, and about Vaishnava Temples in his blogspot:

http://samptamilspeak.blogspot.com/

You can visit his blog to know more about temples and Vaishnava Divya desams in India.
His blogspot gives details in both English and Tamil.

Women in Hinduism

Women in Hinduism:

"To understand the position of women in Hinduism, one must understand the true essence of Hindu scriptures and be able to discriminate between what is religious philosophy versus what was merely social philosophy in the ancient times. The social philosophy varies with time, but the religious ideals do not. This point is critical since Hinduism has a large number of scriptures and lack of right understanding as to their content and hierarchy can result in distortion of the Hindu religious tradition."

Hindu Concept of God

Hindu Concept of God


In general Hinduism considers God not just as the Supreme All-powerful Gigantic One, Who commands the humanity to tread the way He/She/It says, but also a personal God Whom the individual can worship out of love and not necessarily out of fear ! The fear brings one only upto certain point and beyond that it repels, but love takes through to the point. Devotion or bhakti as often referred to is a very key concept in Hinduism, even for the philosophically inclined ones. While the shashtras - be it vedas, Agamas, purANas - describe the Glory of God, one finds abundance of stotras that praise the God in love